இந்திய வர்த்தக சம்மேளனத்தினால் (ICC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2ஆவது ICC Emerging Asia Banking விருதுகள் 2024 நிகழ்வில், அமானா வங்கிக்கு இடர் முகாமைத்துவத்தில் சிறந்த செயற்பாட்டை கொண்டிருந்தமைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தெற்காசிய பிராந்தியத்தில் வங்கியியல் கட்டமைப்பில் சிறந்த வினைத்திறனை கொண்டிருந்தமையை கௌரவித்து இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்த நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ICC உடன் இலங்கை நிபுணத்துவ வங்கியியலாளர் சம்மேளனம் கைகோர்த்திருந்தது.
அமானா வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி விருதை பெற்றுக் கொண்ட பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “முன்னணி வங்கிகளுடன் போட்டியிட்டு, இந்த பெருமைக்குரிய விருதை சுவீகரித்தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அமானா வங்கியின் சொத்துகளை அடிப்படையாகக் கொண்ட பிரத்தியேகமான வங்கியியல் மாதிரியின் வலிமையை இந்த கௌரவிப்பு வெளிப்படுத்துவதுடன், அதனூடாக நிதிசார் ஒழுக்கம், முறையான நிதிச் செயற்பாடுகள் மற்றும் இடர் பகிர்வு போன்றன ஊக்குவிக்கப்படுகின்றன. இடர் முகாமைத்துவத்தின் வெற்றிகரமான செயற்பாடுகள் என்பது துரித நிதிவழங்கல் மதிப்பீட்டு செயற்பாடுகள், பரிபூரண இடர் முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளருடனான முறையான ஈடுபாடு போன்றவற்றின் அடிப்படையில் தங்கியுள்ளது. பிரிவுசார் முதலீடுகளில் கவனம் செலுத்தி, கடன் இடர் முகாமைத்துவத்தை நாம் வினைத்திறனான வகையில் பேணியுள்ளதுடன், உயர் தரமான இலாகா கட்டமைப்பையும் கொண்டுள்ளோம். எமது அர்ப்பணிப்பான அணியினருக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், இடர் முகாமைத்துவ சிறப்பில் அவர்களின் சிறந்த செயற்பாடுகள் என்பது இந்த கௌரவிப்பை நாம் பெற்றுக் கொள்வதில் முக்கிய பங்காற்றியிருந்தது.” என்றார்.
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்திய அரசாங்கத்தின் நிதிச் சேவைகள் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ விவேக் ஜோஷி, இந்திய அரச வங்கியின் தவிசாளர் ஸ்ரீ தினேஷ் குமார் காரா மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஏ ஏ எம் தசீம் ஆகியோரின் உரைகள் அடங்கியிருந்தன.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
இடமிருந்து: அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் ICC Emerging Asia Banking Conclave 2024 நிகழ்வில் விருதைப் பெற்றுக் கொள்கின்றார்